பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
|
[1.0] |
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
|
[2.0] |
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
|
[3.0] |
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
|
[4.0] |
Go to Top |
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே
|
[5.0] |
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே
|
[6.0] |
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
|
[7.0] |
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
|
[8.0] |
Go to Top |
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில் படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
|
[9.0] |
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
|
[10.0] |
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
|
[11.0] |
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியைச் சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே
|
[12.0] |
Go to Top |
Audio: https://www.youtube.com/watch?v=PxeeauHz5CQ |
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்
|
[474.0] |
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையிற் துயின்ற பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்
|
[475.0] |
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய்
|
[476.0] |
Go to Top |
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்
|
[477.0] |
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்
|
[478.0] |
புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்
|
[479.0] |
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்
|
[480.0] |
Go to Top |
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய்
|
[481.0] |